சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: ஜெயலலிதாவை சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம் !
சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பல்வேறு விதமான செய்திகள் பரவிய நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில் அதிமுகவின் ஐவரணியில் முதல்வராக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது கட்சித்தலைமையால் ஓரம்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த சில வாரங்களாக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன. இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, நிதியமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முதல்வரின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நடந்தது.
இருப்பினும், இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை இருப்பினும் பன்னீர் செல்வம் குறித்து வெளியாகும் பரபரப்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.