என்.எல்.சியில் உள்ளூர்வாசிகளுக்கே வேலை வாய்ப்பு... கொடுக்காவிட்டால் போராட்டம்: தி.வேல்முருகன்
சென்னை: என்.எல்.சி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை 3 ஆண்டுகாலமாக இழுத்தடிப்பதில் எந்த ஒரு அடிப்படை நியாயமும் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டிய ஊதிய மாற்று பேச்சுவார்த்தையானது 42 மாதங்கள் கடந்த நிலையிலும் உடன்பாடு எட்டப்படாமலேயே உள்ளது. இதுவரை 18 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. ஆகையால் இந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடித்து 30% ஊதிய உயர்வையும் 2 இன்கிரிமெண்டுகளையும் எந்த ஒரு தாமதமும் இல்லாமல் வழங்கவேண்டும்.
கடந்த ஊதிய மாற்று ஒப்பந்தத்தின் போது 14 ஆயிரம் நிரந்த தொழிலாளர்கள் இருந்தார்கள். அப்போது என்.எல்.சி. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ950 கோடிதான். தற்போது 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களைக் கொண்டு என்.எல்.சி. நிறுவனமானது நிகர லாபமாக ரூ1,526 கோடியை ஈட்டியுள்ளது. ஆகையால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை 3 ஆண்டுகாலமாக இழுத்தடிப்பதில் எந்த ஒரு அடிப்படை நியாயமும் இல்லை அவர்கள் வயிற்றில் அடிப்பதைக் கைவிட்டு உடனே ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்,
அதேபோல் இந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டிய கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கிடைக்க வேண்டிய அலவன்சுகளையும் தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா, ஸ்டீல் இந்தியா நிறுவனங்களை விட என்.எல்.சி.யில் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதாக நிர்வாகம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இதர பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யைவிட மிக அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதுதான் யதார்த்தம்.
என்.எல்.சி.யில் தொழிலாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்த போனஸ், இன்சென்டிவ் என்பது மாற்றப்பட்டு தொழிலாளர்களுக்கு ரூ1,24,000; அதிகாரிகளுக்கோ ரூ12,00,000 என ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதாவது 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கான ஊதிய தொகையைப் போல 3 மடங்கு அதிகமாக 4 ஆயிரம் அதிகாரிகளுக்கு இது வழங்கப்படுகிறது. ஆனால் இதர பொதுத்துறை நிறுவனங்களில் அப்படியான நிலைமை இல்லை.
வேலை வாய்ப்பு
மேலும் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள், ஹவுசி கோஸ் தொழிலாளர்கள், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள், இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள், அப்ரண்டீஸ் முடித்தவர்கள் ஆகிய தரப்பினரின் வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும்.
30 ஆண்டுகால நடைமுறை
கடந்த 30 ஆண்டுகளாக என்.எல்.சி.நிர்வாகத்தில் நடைமுறையில் இருந்த பணிச்சுமை, கூடுதல் பணிநேரம் காரணமாக வழங்கி வந்த சி.ஆப். முறையை நிறுத்தக் கூடாது. என்.எல்.சி.யில் பணியாற்றும் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மருத்துவ சேவையை எந்த காரணத்தை முன்னிட்டும் நிறுத்தக் கூடாது.
பேருந்து போக்குவரத்து
என்.எல்.சி. நிர்வாகம் இயக்கி வருகிற பேருந்து துறையை தனியாருக்குத் ஒருபோதும் தாரை வார்க்கக் கூடாது; என்.எல்.சி. நிர்வாக அலுலகப் பணியாளர்களின் பணிநேரத்தை அதிகப்படுத்தக் கூடாது. என்.எல்.சி. நிறுவனத்துக்கான உதிரி பாகங்களை தனியாரிடம் தரமற்றதாக வாங்குவதைக் கைவிட்டுவிட்டு காலியாக உள்ள இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைத்து உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய வேண்டும். குறிப்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
மண்ணின் மைந்தர்களுக்கு
என்.எல்.சி..யின் டிப்ளமோ மைனிங் படித்தவர்கள் எனக் கூறி 140 வடமாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் நெய்வேலி ஜவஹர் கல்லூரியிலேயே டிப்ளமோ மைனிங் படிப்பை கொண்டுவந்து மண்ணின் மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.அத்துடன் நெய்வேலியில் மருத்துவ வசதியை மேம்படுத்திட பொது மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற வேண்டும்.
போராட்டம் வெடிக்கும்
என்.எல்.சி. தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் தொழிலாளர்களின் உரிமை மீட்புக்காக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகளும் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.வேல்முருகன் கூறியுள்ளார்.