பாபநாசம் அணைக்கு இப்படி ஒரு சோதனையா?: மக்கள் தவிப்பு
நெல்லை: நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் இதுவரை கண்டிராத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வறட்சி நிலைக்கு செல்கிறது. தென்மேற்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் போதிய அளவு பெய்யாததால் அணைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நீரை கொண்டு கார்பருவ சாகுபடி தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி முழுமையாக தண்ணீர் கிடைக்காததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில பயிர்கள் கருகின.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வெயில் கோடை போல் கொளுத்தி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக 102 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இதனால் அணைகள் மற்றும் குளங்களில் மிச்சம் மீதி இருக்கிற தண்ணீரும் வேகமாக வற்றி வருகிறது.
அதிலும் மாவட்டத்தில் வற்றாத அணையாக கருதப்படும் பாபநாசம் அணைக்கு இந்த தடவை பெருத்த சோதனை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் கூட இந்த அணையில் தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது பாலைவனம் போல் மாறிவிட்டது.
143 அடி கொள்ளவு கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அணை தற்போதைய நிலையில் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதில் உள்பகுதியில் இதுவரை பார்த்திராத காட்சிகள் தெரிகின்றன. பாபநாசம் அணையில் சுமார் 20க்கும் மேற்பட்ட முதலைகள் தண்ணீர் இல்லாமல் உயிரை காப்பாற்ற போராடுகிறதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியிலும் புலி, சிறுத்தை, யானை, மான் போன்ற விலங்குகளும் தண்ணீர் இல்லாமல் திரிந்து வருகின்றன. இந்த திடீர் சோதனையால் பொதுமக்கள் திணறிப் போய் உள்ளனர்.