கேரளாவில் முழுஅடைப்பு- தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்-புளியரை சோதனை சாவடி 'வெறிச்'
கேரளா பந்த் காரணமாக தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நெல்லை: கேரள மாநிலத்தில் பந்த் காரணமாக எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
வட இந்தியாவில் தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேரம் முழு அடைப்பு நடந்து வருகிறது. அனைத்து கட்சி சார்பில் நடைபெற்று வரும் இந்த பந்த் காரணமாக, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான புளியரையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் கேரளாவில் பந்த் காரணமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், அறிவிப்பை மீறி கொல்லம் சாஸ்தான் கோட்டை பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் சற்றுநேரத்திலேயே அது அடித்து நொறுக்கப்பட்டது.
பேருந்து இயக்கம் முற்றிலுமாக இல்லாததால், செங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டதுடன், எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications