கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் திடீர் போராட்டம்..!
கடையநல்லூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகி்ச்சை அளிக்க டாக்டர்கள் உரிய நேரத்தில் இல்லாமல் போனதால், பொதுமக்கள் மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார சீரேக்டு காரணமாக, 2 வருடங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பரவியது. அதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு பரவிய காய்ச்சல் மாவட்டத்தின் பல பகுதிகளையும் ஆட்டி படைத்தது. இன்றளவும் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. அவ்வப்போது சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
தற்போது மழை மற்றும் குளிர்காலம் என்பதால் கடையநல்லூரில் மீண்டும காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக அளவிலான பொதுமக்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் பணியில் இல்லாததால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கடையநல்லூரை சேர்ந்த உசேன் என்பவர் காய்ச்சல் தீவிரமானதால் கடையநல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போது டாக்டர் இல்லை. இதனால் இரண்டு மணி நேரமாக அவருக்கு சிகிக்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது போல் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செய்யது பாத்திமா என்ற பெண்ணும் சிகிச்சைக்காக இரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த போராட்டத்தால் மருத்துவமனை ஊழியர்களும், நர்சுகளும் திணறி போய் விட்டனர்.












Click it and Unblock the Notifications