பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் 'அலை' குறித்து விசாரித்த ப.சிதம்பரம்!
மானாமதுரை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மானாமதுரை சட்டசபைத் தொகுதியில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
அப்போது ஒவ்வொருவரிடமும் மோடிஅலை வீசுகிறதா, காங்கிரஸ் வெ்ற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விசாரித்தார்.
அப்போது பேசிய பலரும் மோடி அலைதான் வீசுகிறது. அதேசமயம், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் இதை நாம் முறியடிக்கலாம் என்று ப.சிதம்பரத்திற்கு ஆலோசனை கூறினார்களாம். அதை ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டாராம்.
பூத் கமிட்டி உறுப்பினர்களில் எத்தனை பேர் யூத்துப்பா...?
முதலில் பூத் கமிட்டியில் உள்ளவர்களில் எத்தனை பேர் இளைஞர்கள் என்று விசாரித்தாராம் ப.சிதம்பரம்.
பப்பாதி பழைய 'பூத்'துதான்
ஆனால் கமிட்டி உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இல்லாததை அறிந்து தர்மசங்கடப்பட்டாராம் ப.சிதம்பரம்.
மோடி அலை வீசுதா
பின்னர் ஒவ்வொருவருடனும் தனித் தனியாக பேசினார். அவர்களிடம் நரேந்திர மோடி இங்கே வீசுகிறதா, ஜெயலலிதா பிரதமர் கனவில் உள்ளாரே அது முடியுமா.. என்று பல கேள்விகளைக் கேட்டாராம்.
மக்கள் என்ன பேசிக்கிறாங்க
அதில் ஒரு கேள்வி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது. அப்போது பூத் கமிட்டியைச் சேர்ந்த பலரும் மோடி அலை வீசுவது போலத்தான் தெரிகிறது. 40 சதவீதம் பேர் மோடிதான் பிரதமர் என்று கருதுகின்றனர்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிச்சுட்ட்ட்ட்டா...
பேசாமல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் காங்கிரஸை ஆதரிப்பார்கள். காங்கிரஸ்தான் மக்களுக்கு பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்தனராம்.
காணாமல் போன கட்சிகள்
பின்னர் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். அப்போது, காங்கிரஸ் தேசிய கட்சியாகும் கூட்டணியாகவோ, தனியாகவோ தேர்தலை சந்திக்கும் பெரிய கட்சியாகும். ஜனதா கட்சி ஐக்கிய ஜனதாதளம் வி.பி.சிங் கட்சி என பல கட்சிகள் காணாமல் போய் விட்டது.
தைரியமாக இருங்கள்
ஆனால் காங்கிரஸ் அப்படி இல்லை. கூட்டணி இல்லை என்றால் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, சாதனை திட்டங்களை சொல்லி தைரியமாக இந்த நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்றார்.