உலுக்கிப் போட்ட சுனாமி - காரைக்கால் நினைவுத் தூண் பகுதியில் மக்கள் அஞ்சலி
புதுச்சேரி: 2004 ஆம் ஆண்டு ஆசியாவையே உலுக்கிப் போட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட புதுவை மாநிலம், காரைக்கால் பகுதியில் சுனாமி பாதிப்பினை பிரதிபலிக்கும் வகையிலான நினைவுத் தூண் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காரைக்காலில் 2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமியில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
இவர்களது உறவினர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இன்று அஞ்சலி செலுத்தும் வகையில் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூண் தயார்படுத்தப்பட்டுள்ளது.
500 பேர் உயிரிழப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் பத்து மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
பூர்விக வீட்டிலேயே வாசம்:
தொண்டு நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளும், மீனவர்கள் வாழும் கிராமத்துக்கு அருகே சுனாமி குடியிருப்புகளை கட்டித் தந்தது. இவற்றில் பெரும்பாலான மீனவர்கள் வசித்தாலும், கிராமத்தில் உள்ள பூர்வீக வீடுகளை பழுது நீக்கி அதிலேயும் வாழ்ந்துவருகின்றனர்.
தொற்றிக் கொள்ளும் சோகம்:
எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், சுனாமி நினைவு நாள் வருகிறது என்றாலே அவர்களிடையே சோகம் தொற்றிக்கொள்கிறது.
அடக்கம் செய்த இடத்தில் அஞ்சலி:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் இறந்தோரை அடக்கம் செய்த பூவம், போலகம் ஆகிய இரு இடங்களிலும் உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் அஞ்சலி செலுத்துவர்.
சுனாமி நினைவுத் தூண்:
புதுச்சேரி அரசு சார்பில் இவர்களின் நினைவாக கடற்கரைப் பகுதியில் சுனாமி நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணி:
இதன் பராமரிப்பில் இருந்த குறைபாட்டால் பொலிவிழந்து காணப்பட்டது. இந்த நிலையில் பொதுப்பணித் துறை நிர்வாகம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
மெளன ஊர்வல அஞ்சலி:
நினைவுத் துண் இருக்கும் பகுதி வர்ணம் பூசுதல், சுற்றிலும் உள்ள நடைபாதை சீரமைப்பு, வளாகத்தில் புல் வளர்ப்பு, பூச்செடிகள் அமைப்பு மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் உள்ளிட்டோர் மௌன ஊர்வலமாக அப்பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.