மொபைல்போன் சிக்னலுக்காக கத்திப்பாரா பாலத்தில் சாரை சாரையாக குவிந்த மக்கள்..
சென்னை: சென்னையில் மொபைல்போன் நெட்வொர்க் பல பகுதிகளில் செயலிழந்து போன நிலையில் மொபைல்போன் சிக்னலுக்காக பலர் கத்திப்பாரா மேம்பாலத்தில் குவிந்தனர்.
சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குடிநீர், மின்சாரம், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைக்காமல் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மொபைல்போன் டவர்கள் செயலிழந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்கள் மொபைல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன், சிக்னல் கிடைக்காமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், அவசரத்திற்கு கூட அழைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், வெளியூரில் உள்ளவர்கள், தங்களின் உறவினர் பற்றிய நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் மொபைல்போன் சிக்னல் கிடைப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பலர் மொபைல்போனில் பேசுவதற்காக குவிந்தனர். பலர் வாகனங்களில் வந்து சாலையோரம் நின்றுகொண்டு உறவினர்களிடம் பேசினர்.
வெளியூர்களில் உள்ள சொந்த பந்தங்களிடமும் தங்களது நிலையை எடுத்துக் கூறி மகிழ்ச்சியும், ஆறுதலும் அடைந்ததை காண முடிந்தது. ஆனால், சிக்னல் விட்டு விட்டு கிடைப்பதாக பலர் ஏமாற்றத்துடன் நின்றதையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மொபைல்போன் நெட்வொர்க் மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது. இதையடுத்து, தற்போது நேரடியாக பலர் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். விரைவில் மொபைல்போன் டவர்கள் முழுமையாக செயல்பட துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications