ஜிஎஸ்டி பற்றி மக்களுக்கு அச்சம் வேண்டாம்.. விலைவாசி ஏறாது: நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை: ஜிஎஸ்டி வரி பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ஜெயக்குமார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தின் சுயாட்சி, தன்னாட்சி பறிபோகாத வகையில் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டிக்கு சம்மதிப்போம் என மத்திய அரசிடம் தெரிவித்தோம். பெட்ரோலிய பொருள், மதுபான பொருட்களுக்கு மாநில அரசே வரி விதிக்க அனுமதித்தால்தான் ஆதரவு தருவோம் என்று கோரினோம்.
வரி இழப்பை ஈடு செய்தால்தான் ஜிஎஸ்டிக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தோம். இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
ஜெயலலிதாவின் கோரிக்கைகள் நிறைவேறியதால்தான் இன்று இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் நிதி தன்னாட்சி பெற்றுள்ளன. ஜிஎஸ்டி பற்றி யாரும் அச்சப்பட வேண்டாம்.

வரி செலுத்த வேண்டியது
வரி விகிதங்கள் இருவகைப்படும். ஒன்று நேரடி வரிவிதிப்பு. மற்றொன்று, மறைமுக வரி. நுழைவுவரி, ஆடம்பர வரி, வாட் போன்றவை இதில் அடங்கும். எனவே, இப்படி பல்வேறு வரிகள் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும்போது, இந்தியா என்ற கட்டமைப்பில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு ஒரு பொருளை வர்த்தகம் செய்தால் பல்வேறு நிலைகளில் வரி செலுத்தும் நிலை இருந்தது.

விலை உயராது
ஒவ்வொரு மாநிலத்தை தாண்டும்போதும், உதாரணமாக, வடக்கில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒவ்வொரு மாநிலமாக தாண்டிவரும்போது, ஒவ்வொரு மாநிலத்திலும், 10 சதவீதம் என்று வைத்தாலும்கூட, இறுதியாக நுகர்வோருக்கு வந்தடையும்போது விலை பல மடங்கு ஏறும் நிலை இருந்தது. இப்போது, ஜிஎஸ்டியால் அந்த நிலைமை இருக்காது.

விலைவாசி கட்டுப்படும்
உற்பத்தி அதிகரிக்கும் நிலையும், விலைவாசி கட்டுப்படுத்தும் நிலையும் இதனால் ஏற்படும். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விலைவாசி ஏற்றத்தில் இருந்து காப்பாற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி நமது மாநிலத்தில் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வரிகள் கணினி மயப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே ஜிஎஸ்டியை தமிழகத்தில் அமல்படுத்துவதில் சிக்கல் இல்லை.

விழிப்புணர்வு உள்ளது
வணிகர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை அரசு நடத்தியுள்ளது. சுமார் 2000 பேர் அதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். உலகம் முழுக்க 148 நாடுகளில் ஒரே வரிதான் அமலில் உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications