குற்றாலத்திற்கு ஆபத்து: ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கு எதிராக பொது மக்கள் இன்று போராட்டம்
நெல்லை: சுரண்டை-செங்கோட்டை மெயின்ரோடு மங்கம்மா சாலை அருகே ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.
தென்காசிப் பகுதிகளில் இதுவரை வீசி வந்த தென்றல் காற்றுக்கு ஆபத்து வந்துள்ளதாம். மாறாக நச்சுக் காற்று தான் வீசப்போவதாக சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை- செங்கோட்டை மெயின்ரோடு மங்கம்மா சாலை அருகே ராம்கோ சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு அதற்கான பூர்வாங்கப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் தூசுகள் மற்றும் ரசாயனக் கலவைகள் காற்றின் மூலமாக விவசாய நிலங்களில் படிந்து பயிர் விளைச்சலை பாதிக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதுமட்டுமின்றி குற்றால மலைக்கு இது பெரும் கேடு விளைவிக்கும் என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தவிர சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் தூய்மையற்ற காற்றை பொது மக்கள் சுவாசிப்பதினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.
இதனால் ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு எதிராக ஆய்க்குடி, சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, தேசிய நகர் கிராம மக்கள் இன்று போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications