இலவச வீடு- இணையதளத்தில் பதிவு செய்ய இரவு முழுக்க காத்திருந்த நெல்லை மக்கள்
இலவச வீடு திட்டத்திற்காக இணையதளத்தில் பதிவு செய்வதற்காக திருநெல்வேலியில் பொதுமக்கள் விடிய விடிய காத்துக்கிடந்தனர்.
நெல்லை: இலவச வீடு திட்டத்தில் பதிவு செய்ய நெல்லையில் உள்ள இணையதள மையத்தில் பொது மக்கள் இரவு முழுவதும் காத்து கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடில்லாத அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கும் மத்திய-மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதிகளில் வீடு கட்டு கொடுக்க விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி கடந்த ஜூலையில் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட விரும்பியவர்கள் விண்ணப்பத்தை நிரப்பி பாளை பெருமாள்புரம் குடிசை மாற்று வாரியத்தில் சமர்ப்பித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் இதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் பதிவு செய்ய குடிசை மாற்று வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுத்தமல்லி, மானூர் சுற்று வட்டார கிராமப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நெல்லை சந்திப்பில் உள்ள இணைய தள மையத்தை முற்றுகையிட்டனர். குறிப்பிட்ட அந்த இணையதள மையத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் மற்ற இடங்களில் பதிவு செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் சென்டர் முன்பு விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் தகுதி இருந்தால் தான் வீடு கட்டு கொடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஊழியர்கள் எடுத்து கூறினர்.
அரசு சார்பில் விண்ணப்பம் வழங்காமல் இணையதளத்தில் பதிவு செய்தால் போதும் என்று கூறியிருப்பதால் அவர்கள் இரவு வெகு நேரம் வரை காத்திருந்து பதிவு செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications