கூட்டம், கூட்டமாக வாக்குச்சாவடியில் குவிந்த ஆர்.கே.நகர் மக்கள்.. காரணம் இதுவா?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், காலை 8 மணிக்குதான் வாக்குப்பதிவு தொடங்கிபோதிலும், காலை 7 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடிகளை மொய்த்த மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர்.
நேரமாக கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. கடும் அமளி துமளிகளுக்கு பிறகு, நடக்குமோ, நடக்காதோ என கடைசி வரை சஸ்பென்ஸ் இருந்த ஒரு தேர்தலில் மக்கள் இந்த அளவுக்கு ஆர்வமாக வாக்களித்து ஆச்சரியம் ஏற்படுத்தினர்.
ஆனால், வேட்பாளர்கள் மாறி மாறி கவனித்ததால், நன்றி உணர்ச்சியோடு வாக்காளர்கள் கூட்டமாக வரத்தொடங்கிவிட்டனர். வாக்களிக்க வராவிட்டால் வேட்பாளர்களின் ஆட்கள், வீட்டுக்கே வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்பதால் அவர்களுக்கும் வேறு வழியில்லை என்று கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.

மக்கள் கருத்து
நம்ம மக்கள் அப்படியெல்லாம் செய்ய கூடிய ஆட்கள் இல்லையே, நெட்டிசன்கள் சும்மா கிண்டல் செய்கிறார்கள் என்ற கருத்தோடு, இதுகுறித்து ஆர்.கே.நகரில் வாக்களிக்க வந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் கருத்து நெட்டிசன்கள் கருத்திலிருந்து மாறுபட்டு இருந்தது.

ஓராண்டாக ஒருவரும் இல்லை
ஆர்.கே.நகர் தொகுதி கடந்த ஒரு வருடமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி சும்மா கிடக்கிறது. இதனால் மக்கள் தங்கள் குறைகளை சொல்லக்கூட ஆளில்லாத நிலை உள்ளது.

எம்எல்ஏ வேண்டும்
ஆர்.கே.நகர் தொகுதி தாயில்லாத பிள்ளையை போல உள்ளது. இந்த நிலையில்தான் ஒரு வழியாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்களிக்க வந்துள்ளோம். இதன் மூலம் மக்கள் பிரதிநிதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தப்பாக நினைக்கிறார்கள்
ஆர்.கே.நகர் தொகுதியை பற்றி வெளியே இருந்து பார்க்கும் மக்கள் மனநிலை வேறுமாதிரி உள்ளது. எவ்வளவு கிடைத்தது என்பது முதல் கேள்வியாக முன் வைக்கிறார்கள். வேறு ஏரியாக்களில் உள்ள எங்கள் சொந்தக்காரர்கள் முதல் கேள்வியாக இதைத்தான் கேட்கிறார்கள். இன்றாவது கிடைத்ததா என்று போன்போட்டு விசாரிக்கிறார்கள்.

போன் போட்டு கேட்குறாங்க
ஆர்.கே.நகர் குறித்த இதுபோன்ற கருத்துக்கள் எங்களை அவமானப்படுத்துவதை போல உள்ளது. இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காகவே வாக்களிக்க ஆர்வம் காட்டுகிறோம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications