மக்களை பீதிக்குள்ளாக்கிய மோடி.. ராத்திரியில் ரூபாய் நோட்டை மாற்ற அலைபாய்ந்த அவலம்!
ரூ 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் கையில் இருப்பில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற இரவில் மக்கள் அலையும் அவல நிலை ஏற்பட்டது.
சென்னை: இன்று நள்ளிரவு முதல் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தாலும் அறிவித்தார் மக்கள் பெரும் பதட்டமாகி விட்டனர். கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் அலைபாய்ந்தனர்.
கள்ள நோட்டுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
மோடியின் அறிவிப்பு நாட்டின் நலனைக் கருத்தில் கொண்ட முடிவுதான் என்றாலும் சாதாரண மக்களுக்கு இது பெரும் ஷாக்காக அமைந்து விட்டது.
மக்கள் குழப்பம்
இன்று ஒவ்வொருவரிடமும் ரூ. 500, 1000 கரன்சி நோட்டுக்கள் இருப்பது சர்வ சாதாரணம். இதனால் மோடியின் அறிவிப்பால் கையில் இருந்த பணத்தை என்ன செய்வது என்று குழப்பத்தில் மக்கள் ஆழ்ந்து போயினர்.
அதிர்ச்சி
சென்னையில் பல இடங்களிலும் மோடியின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அலை பாய்ந்ததைக் காண முடிந்தது.
நோட்டுக்களை மாற்ற அலைந்த பரிதாபம்
மொத்தக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற மக்கள் சில்லறைகளை மாற்றுவதைப் பார்க்க முடிந்தது. திடீரென மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுடன் வந்ததால் கடைக்காரர்கள் குழம்பிப் போய் விட்டனர். விஷயம் தெரிந்ததும் அவர்களும் அதிரச்சி அடைந்தனர்.
டாஸ்மாக் கடைகளில்
டாஸ்மாக் கடைகளிலும் போய் மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் எப்படியும் மொத்தமாக வங்கியில்தான் பணத்தைச் செலுத்துவார்கள் என்பதால் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொணடு சில்லறை கொடுத்தனர். அதேசமயம் பல இடங்களில் பணத்தை வாங்க மறுத்து விட்டனர்.
பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அலை பாய்ந்தனர். இப்படி இரவு நேரத்தில் நம்மைப் புலம்ப வைத்து விட்டாரே மோடி என்று மக்கள் எரிச்சலடைந்ததையும் காண முடிந்தது.