விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாருமே வாழ்ந்தது இல்லை - பிரேமலதா ஆவேசம்!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததே இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கதிராமங்கலத்தில் அதிரடியாகப் பேசினார்.
தஞ்சை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்தது இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கதிராமங்கலம் போராட்டத்தில் ஆவேசமாகப் பேசினார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரமலதா விஜயகாந்த் ஆகியோர் நேரில் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது பேசிய பிரேமலதா மக்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் தேமுதிக மக்களுக்கு ஆதரவாக துணை நிற்கும். மக்கள் வெகுண்டெழுந்து போராடுகிறார்கள். ஆனால் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாக மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது.
தேமுதிக பொங்கியெழும்!
மக்களின் போராட்டங்களைப் பார்த்து மத்திய, மாநில அரசு போராட்டத்தை நிறுத்திவிடும் என தேமுதிக பொறுமை காத்தது. ஆனால், ஒ.என்.ஜி.சி நிறுவனம் தன் பணிகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுக்கு என்ன லாபம்?
மக்களின் நலனுக்காகத்தானே அரசு திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் வேண்டாம் என மக்கள் தொடர்ந்து போராடும்போது அரசு ஏன் அதனை கட்டாயப்படுத்தி கொண்டுவருகிறது. அப்படியானால் அரசுக்கு இதில் என்ன லாபம் இருக்கிறது?
விவசாயிகள் மரணம்
தஞ்சை மாவட்டம் முழுதும் நீர் ஆதாரங்கள் வறண்டு உள்ளன. இப்பகுதிகளில் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ள விவசாயிகள் தண்ணீர் இல்லாத காரணத்தால் இறந்து மடிகின்றனர். இது அரசின் தவறான கொளகையால் உண்டாகின்ற விபரீதம். விவசாய நிலங்களில் குழாய் பதித்து மொத்த விவசாயத்தியும் அழிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஏன் அரசு கட்டாயப்படுத்துகிறது?
எல்லா நாடுகளிலும் இந்தத் திட்டம் உள்ளது என அரசு கூறுகிறது. ஆனால், அது மக்கள் வாழத் தகுதியற்ற மணற்பாங்கான இடம், கடற்பகுதி உள்ளிட்ட இடங்களில் தான் திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். ஆனால், இந்தியாவில் மனிதர்கள் விவசாயம் செய்து வாழும் பகுதியில் எண்ணெய் எடுக்க முயற்சிப்பது எதனால்? மக்களின் விருப்பத்தையும் மீறி ஒரு திட்டத்தை ஏன் கட்டாயப்படுத்தி புகுத்த வேண்டும்?
அனைவரையும் விடுதலை செய்யுங்கள்
மத்திய அரசு மக்கள் மீது வாட், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என பல்வேறு வரிகளைச் சுமத்தி துன்பப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் மக்கள் மீது அதிக வரி சுமத்துகிறார்கள் என அவர்களிடம் போராடி விடுதலை பெற்றோம். இப்போது மக்கள் அதே அளவுக்கு துன்பத்தை அனுபவிக்கின்றனர். கதிரமங்கலத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
அதிமுக அழிந்துவிட்டது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கால்வைத்த போராட்டம் எதுவும் தோற்றது இல்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனம் இங்கிருந்து வெளியேறும். மேலும் விஜயகாந்தை எதிர்த்தவர்கள் யாரும் உயிரோடு வாழ்ந்தது இல்லை. ஜெயலலிதா தேமுதிகவை அழிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், இன்று அதிமுக அழிந்துவிட்டது என பேசினார் பிரேமலதா.