கொழும்பில் தமிழகம்- இலங்கை மீனவர்கள் இடையே 2 ஆவது கட்டபேச்சுவார்த்தை தொடங்கியது!
சென்னை: தமிழகம், இலங்கை மீனவர்களிடையேயான 2வது கட்ட பேச்சுவார்த்தைகொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர். பன்னாட்டு கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து விடுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக- இலங்கை மீனவர் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 13 ஆம் தேதி கொழும்புவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைகடற்படையால் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் பேச்சுவார்தை நடைபெறுவதும் தடைப்பட்டது.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக தமிழக மீனவர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை கொழும்பு சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர் பிரதிநிதிகள் 13 பேரும், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 9 பேரும் பங்கேற்றுள்ளனர். இலங்கை சார்பில், மீனவர் பிரதிநிதிகள் 20 பேரும், அதிகாரிகள் 10 பேரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக மீனவர்களை பாரம்பரியமான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், மீனவர்கள் கைது நடவடிக்கை கூடாது, தாக்குதல்கள் கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் இலங்கையிடம் முன்வைக்கப்படுகின்றன.
இன்றும், நாளையும் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினரின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்வு காணப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.