விழுப்புரத்தில் வீடு மாறி வீசிய பெட்ரோல் குண்டு - போலீஸ் விசாரணை
விழுப்புரத்தில் முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் முன் விரோதத்தினால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசுவதற்கு பதில் பக்கத்தில் வசிக்கும் ஒப்பந்தகாரர் வீட்டில் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது பங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி இருசப்பன் பெயரில் இருவர் பிரகாஷிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

இது குறித்து பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிரகாஷின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒப்பந்தகாரர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள சிசிடிவி பதிவுகளை சோதனை செய்த போது பிரகாஷின் வீட்டிற்கு பதில் பக்கத்து வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை மர்மநபர்கள் வீசி சென்றது தெரியவந்தது.
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications