பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. விலை உயர்வு, புதிய வரி: இப்பவே கண்ணைக் கட்டுதே!
சென்னை: பெட்ரோல், டீசல், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால் மக்களின் பர்ஸில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26ம் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டன. புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைத்து கவலைப்படும் மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய வரி
மத்திய பட்ஜெட் தாக்கலின்போது விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை காக்க புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில் கிரிஷி கல்யாண் செஸ் என்ற கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அந்த வரிவிதிப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது.
15 சதவீதம் வரி
புதிய வரிவிதிப்பின்படி ஏற்கனவே செலுத்திய 14.5 சதவீத சேவை வரியை தற்போது 15 சதவீதமாக செலுத்த வேண்டும். இந்த புதிய வரியால் மக்களின் பர்ஸ் பதம் பார்க்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர்
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டதே என கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்தவர்களுக்கு மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.21 உயர்த்தப்பட்டுள்ள செய்தி தலையில் ஓங்கி அடித்தது போன்று உள்ளது.
கண்ணை கட்டுதே
ஒரே நாளில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பத்தாக்குறைக்கு புதிய வரி விதிப்பால பல பொருட்கள், சேவைகளின் விலை உயர்வு என திரும்பும் பக்கம் எல்லாம் உயர்வாக உள்ளதை நினைத்து மக்களுக்கு இப்பவே கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது.