அக்.6ல் பாப்புலர் ஃபிரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை: குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை கண்டித்து அக்டோபர் 6 ந் தேதி சென்னையிலும், மதுரையிலும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் குறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக மாநில தலைவர் இஸ்மாயில் கூறுகையில்,
இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களது சொந்த பிரச்சனைகளுக்காக படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையிலும், முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என மதச்சாயம் பூசி வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது போன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப்பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல.
ஆனால், இந்த கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவரும் முன்பே தலைமறைவாக இருப்பவர்கள் தான் இக் குற்றத்திற்கு காரணமாக இருப்பார்கள் என வழக்கை ஒரு திசையைநோக்கி செலுத்துவதும், தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
எங்கு குண்டு வெடித்தாலும், இந்து தலைவர்கள் படுகொலை நடந்தாலும், அதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று, அப்பாவிகளை குற்றவாளிகளாக சித்தரித்து பொய் வழக்குகளில் கைது செய்கின்றனர்.
இதைக் கண்டித்து அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும். சென்னை மற்றும் மதுரையில் இப்போராட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications