தொடக்கமே இப்படியா? தென்காசியில் சசிகலாவுக்கு அதிர்ச்சி.. கைவரிசை காட்டிய ‛பிக்பாக்கெட்’ திருடர்கள்
தென்காசி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இன்று முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தென்காசியில் தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் திருடர்கள் ‛பிக்பாக்கெட்' அடித்து கைவரிசை காட்டியது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் தோழியாக இருந்தவர் சசிகலா. அதன்பிறகு சில காலம் ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்ட சசிகலா மீண்டும் இணைத்து கொள்ளப்பட்டார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த தொடங்கினார்.
ஆனால் அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கிய நிலையில் அவரால் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 4 ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகு திரும்பி வந்த சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இருப்பினும் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்க உள்ளதாக மட்டும் தெரிவித்து வந்தார். தற்போது அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க மூத்த நிர்வாகிகள் சிலர் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தகைய சூழலில் தான் சசிகலா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணத்துக்கு‛ அம்மாவின் வழி மக்கள் பயணம்' என பெயர் வைத்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் என்பது பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக சசிகலா மேற்கொண்டு வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தை இன்று சசிகலா தென்காசியின் காசிமேஜர் புரத்தில் தொடங்கினார். இந்நிலையில் தான் தென்காசியில் இன்று சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியபோது அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலாவின் ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்களிடம் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். மொத்தம் 5 பேரிடம் திருடர்கள் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications