மாணவனின் கன்னத்தை கிள்ளிய சென்னை ஆசிரியை: ரூ. 50,000 அபராதம் விதிக்க கோரி வழக்கு
சென்னை: மாணவனின் கன்னத்தை கிள்ளியதற்காக ஆசிரியைக்கு ரூ.50,000 அபராதம் கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கு சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள கேசரி என்ற மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை மெகருன்னிசா. குறும்பு செய்து ஆத்திரப்படுத்திய மாணவன் ஒருவரின் கன்னத்தை கிள்ளி தண்டனை கொடுத்துள்ளார் இந்த ஆசிரியை. இந்த சம்பவம் நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு.
ஆனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாய், 2013ம் ஆண்டு மே மாதத்தில் ஆசிரியைக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக பள்ளிக்கு ரூ.1,000 அபராதம் விதித்துள்ளது மனித உரிமை ஆணையம்.
இதையடுத்து பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்ல மாற்றுச்சான்றிதழ் (டி.சி) தருமாறும் சிறுவனின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு பள்ளி மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குறைந்தபட்ச அபராதம் விதித்ததால் அதிருப்தியில் இருந்த அந்த தாய், டி.சி.யையும் தர மறுப்பதால் ஆத்திரமடைந்து உயர் நீதிமன்றத்தில் அபராதத்தை அதிகப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், ஆசிரியைக்கு எதிராக தனிப்பட்ட முறையிலும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து ஹைகோர்ட்டில் ஆஜரான மெகருன்னிசா, கன்னத்தில் கிள்ளியதற்காக பல்வேறு கட்டங்களாக, பல அமைப்புகளால் நான் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறேன் என்றார்.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் கோர்ட்டிலேயே இந்த வழக்கை சந்தித்துக் கொள்ளுமாறு ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் தலைமையிலான பெஞ்ச் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications