கோபாலபுரத்தில் கோலாகலம்.. கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி!
சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை இன்று நண்பகல் சந்திக்கிறார்.
Recommended Video
சென்னை: தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்தா பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த சில மாதங்களாக பாஜக அரசை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்தது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவது, நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை ஆகியன குறித்து ஆலோசனை நடத்த நேரம் கேட்ட திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.
மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கக் கூட பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
திமுக தலைவருடன் சந்திப்பு
இந்நிலையில் தினத்தந்தி பவளவிழா, பொருளாதார ஆலோசகர் சோமநாதன் மகள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பின்னர் நண்பகல் 12.10 மணியளவில் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார்.
பொன்னாடை அணிவிப்பு
பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலாலும் கோபாலபுரம் வந்தார். பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
முரசொலி பவளவிழா மலர்
பின்னர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். இச்சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தன. அப்போது முரசொலியின் பவள விழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக அளித்தார். இதனையடுத்து கருணாநிதியின் இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
தொண்டர்கள் கூட்டம்
இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். கருணாநிதியை சந்திக்க பிரதமர் கோபாலபுரம் வந்திருந்த போது அங்கு பாஜக, திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குழுமியிருந்தனர்.