சென்னை வந்து ஸ்ரீஹரிகோட்டா சென்றார் மோடி... ஆலங்கட்டி மழையால் பயணம் தாமதம்!
சென்னை: நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி-சி23 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. அவரை விமானநிலையத்தில் பூங்கொத்து கொடுத்து ஆளுநர் ரோசைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா சென்றார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி23 ராக்கெட் மூலம் நாளை வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன.
இதனை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை விஜயம்:
பிரதமராகப் பதவியேற்றப் பின் மோடியின் முதல் சென்னை வருகை இது. முன்னதாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். இன்று தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வரும் மோடியை, இங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்துச் செல்ல முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

மோசமான வானிலை:
இந்நிலையில், நேற்று மாலை திடீரென சென்னையில் வானிலை மோசமானது. இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இன்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

கூட்டு ஆலோசனை:
எனவே, இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் தமிழக போலீசாருடன் நேற்று மாலை கூட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

மாற்று ஏற்பாடு:
அதில், வானிலை தொடர்ந்து மோசமாக காணப்பட்டால் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்து செல்வது என போலீஸ் கூட்டுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை...
இந்நிலையில், நேற்று போலவே இன்றும் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை நிலவுகிறது. எனவே, நேற்றைய திட்டத்தின் படி, கார் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மோடி அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டது.

தாமதம்...
இதற்கிடையே மீனம்பாக்கத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மோடி தனது ஸ்ரீஹரிகோட்டா பயணத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

வரவேற்பு...
தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.












Click it and Unblock the Notifications