எம்.எஸ்.வி மறைவு… பிரதமர் மோடி, வைகோ, டாக்டர் ராமதாஸ் இரங்கல்
சென்னை: இசைக்கு மன்னராக இசையை வழிநடத்திச் சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டிவிட்டர் தளத்தில், இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தனிப்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், இவர் காலத்தில் இசைக்கு மன்னராக இசையை வழிநடத்திச் சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இரங்கல்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
திரைப்பட இசையமைப்பாளராக 62 ஆண்டுகளுக்கு அறிமுகமான விஸ்வநாதன் திரை இசையில் எண்ணற்ற புதுமைகளை படைத்தவர். தனது இசையால் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டவர். வீரமூட்டும் பாடல்களாக இருந்தாலும், காதல் பாடல்களாக இருந்தாலும், சோகப்பாடல்களாக இருந்தாலும் அதற்கேற்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்துவது தான் இவரது இசையின் மகத்துவம். இவரது இசையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது; இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் குழந்தையைப் போல பழகக்கூடியவர். விருந்தோம்பலில் சிறந்தவர். இசையில் சிறந்தவன் என்ற கர்வம் இல்லாதவர். அதனால்தான் இப்போது அறிமுகமான இசையமைப்பாளர்களுடன் கூட இணைந்து பணியாற்றுவது அவருக்கு சாத்தியமானது. ஆனால், 1200 படங்களுக்கு இசையமைத்தும் இவரது திறமை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
வைகோ அஞ்சலி
மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், உலகின் தொன்மையான இசை தமிழ் இசை என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டும் விதத்தில் கலை உலகத்தில் இசைக்கருவிகளின் மூலம் நாத வெள்ளத்தைத் தேனருவியாகத் தமிழர்களுக்கு வழங்கிய மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி. ஐம்பதுகளில் வெளிவந்த சோக காவியமான தேவதாஸ் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த இம்மேதை, அறுபதுகளில் வெளிவந்த நடிகர் திலகம் நடித்த பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, திரிசூலம், ராஜபார்ட் ரங்கதுரை, சாந்தி உள்ளிட்ட படங்களுக்கும், மக்கள் திலகம் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கும் இசைத்துத் தந்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.
போராட்டங்களே நிறைந்த என்னுடைய பொது வாழ்க்கையில் என் இதயத்திற்கு இதம் தருபவை இனிய பாடல்கள்தாம். காரில் பயணிக்கும்போதும், இரவு வேளைகளில் நான் தூங்கும்போதும்கூட பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலானவை எம்.எஸ்.வி. இசை அமைத்தவைதான்.
மண்ணுலகை விட்டு அவர் மறைந்தாலும், அவர் இசை அமைத்த பாடல்கள் மூலம் என் போன்றோருக்கு எந்நாளும் அவர் அருகில்தான் இருக்கின்றார். இசைச் செம்மல் எம்.எஸ்.வி. அவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.