தேமுதிகவுக்கு சேலமா?... பாமக கொந்தளிப்பு.. டீ மாஸ்டர் தீக்குளிக்க முயற்சி!
சேலம்: சேலம் நாடாளுமன்றத் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பாமகவினர் கடும் கொதிப்படைந்துள்ளனர். சேலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. பாமகவைச் சேர்ந்த டீ மாஸ்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு கூடியுள்ளது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்குள் செத்துச் சுண்ணாம்பாகி விட்டது பாஜக. ஒரு வழியாக கடுமையாக போராடி இரு கட்சிகளுக்குமான தொகுதிகளை அது தீர்மானித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு பாஜக ஒதுக்கியுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து சேலத்தில் பாமகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஏற்கனவே பாமக அறிவித்து பிரசார வேலையையும் தொடங்கிய தொகுதிகளில் ஒன்றுதான் சேலம். அங்கு தனது வேட்பாளராக அருளை நிறுத்தியுள்ளது பாமக. அவரும் தீவிரமாக வேலை பார்த்து வந்தார். கிராமம் கிராமமாக சென்றும் ஆதரவு திரட்டி வந்தார்.
இந்த நிலையில் சேலத்தை தேமுதிகவுக்கு ஒதுக்கி விட்டதாக வந்த செய்தி பாமகவினரை அதிரச் செய்துள்ளது.
இன்று காலை சேலம் கனரம்பட்டியை சேர்ந்த பா.ம.க நிர்வாகியான கார்த்தி என்பவர், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு வந்தார்.
திடீரென்று உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாரதீய ஜனதா கூட்டணியில் சேலம் தொகுதியை பா.ம.க.வுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்றும், வேட்பாளர் அருள் தான் போட்டியிட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்.
அப்போது ரோந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன், செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை தடுத்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்துவிட்டனர்.
பின்னர் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் டீக்கடை மாஸ்டராக இருக்கிறார். கருங்கல்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பாமக சேலம் தெற்கு தொகுதி இளைஞர் சங்க துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.
கார்த்தி தீக்குளிக்க முயன்ற தகவலை அறிந்த பாமகவைச் சேர்ந்த சிலர் கூடி நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு திரண்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.