எங்கே செல்லும் இந்த பாதை- தைலாபுரமா? பனையூரா? ராமதாஸ்-அன்புமணி மோதலால் பாமக நிர்வாகிகள் பரிதாபம்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பூதாகரமாக வெடித்திருக்கும் மோதலால் அக்கட்சியின் நிர்வாகிகள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொடக்க காலத்தில் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தவர். தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராவது அரசியலுக்கு வந்தால் சாட்டையாலேயே அடித்துக் கொள்வேன் என்றார்.
ஆனால் இன்றைக்கு பாமக என்பது ஒட்டுமொத்தமாக ராமதாஸின் குடும்பம் என்பதாக மட்டுமே உள்ளது. பாமகவின் நிறுவனர் ராமதாஸ்; தலைவர் மகன் அன்புமணி ராமதாஸ்; இளைஞரணித் தலைவர் மகள் வழி பேரன் முகுந்தன்.

இந்த நிலையில் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் வெடித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சகோதரி மகன் முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமிக்க தாய்மாமா அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினார். பாமக சிறப்பு பொதுக்குழுவிலேயே ராமதாஸின் பேச்சை கேட்க முடியாது என மைக்கை தூக்கி எறிந்தார். அத்துடன் தாம் பனையூரில் தனி அலுவலகம் திறந்துவிட்டேன் என்றார் அன்புமணி.
தற்போது, பாமக தலைவர் பதவியில் இருந்தே அன்புமணியை தூக்கியடித்துவிட்டார் ராமதாஸ். அன்புமணியை செயல் தலைவர் எனும் டம்மி போஸ்ட்டில் உட்கார வைத்துவிட்டு இனி பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவ நானே என பிரகடனம் செய்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அப்பா, மகன் இடையேயான மோதலின் உச்சகட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே கூடாது என்கிற நிலைப்பாடு ராமதாஸுடையது; பாஜகவுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அன்புமணியின் நிலைப்பாடு; ராமதாஸின் கூட்டணி தேர்வு அதிமுக அல்லது திமுகதான். இதில்தான் இருவருக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாமக நிர்வாகிகள் அனைவரையும் தைலாபுரம் தோட்டத்து9க்கு வரவழைத்துள்ளார் அக்கட்சியின் இன்றைய நிறுவனத் தலைவரான டாக்டர் ராமதாஸ். அவரது இந்த அழைப்பை ஏற்று தைலாபுரம் தோட்டம் செல்வதா? அல்லது 'சின்னவர்' அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து 'பனையூர்' செல்வதா? என்கிற குழப்பத்தில் இருக்கின்றனர் பாமக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications