ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.... பாமகவின் மதுரை தீர்மானம்
மதுரை: ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்கும், பாமகவை ஆட்சியில் அமர்த்துவோம் என்று மதுரையில் நடந்த பாமகவின் பாண்டிய மண்டல அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை வாடிப்பட்டியில் பாண்டிய மண்டல மாநாட்டை பாமக நேற்று பிரமாண்டமாக நடத்தியது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மான விவரம்:

கலாமுக்கு இரங்கல் தீர்மானம்
பாரதரத்னா அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பாண்டிய மண்டல அரசியல் மாநாடு அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது.

அறிவாற்றலின் அடையாளம்
இராமேஸ்வரத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். எளிமை, திறமை, அறிவாற்றல் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர்.

நேருவுக்குப் பிறகு குழந்தைகளிடம் அன்பு காட்டியவர்
ஜவகர்லால் நேருவுக்கு பிறகு குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டியத் தலைவர் என்பது மட்டுமின்றி, குழந்தைகளுடன் பழகும் போது அவர்களாகவே மாறிவிடுபவர். தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்; தமிழில் மிகுந்த புலமை பெற்றவரும் ஆவார்.

மாணவர்களால் முடியும்
மாணவர்களால் தான் இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களை கனவு காணச் சொன்னவர். கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கி தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை இந்தியாவை வல்லரசாக்கும் பணிக்கு தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உயிர் பிரியும் தருவாயில் கூட மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார் என்பது இளைஞர்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள்
அவரது இழப்பு அறிவியல் உலகம், எழுத்துலகம், மாணவர் உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும், இந்திய குடிமக்களுக்கு இந்த மாநாடு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல்
மது அரக்கனை ஒழிக்க போராடிய காந்தியவாதி சசி பெருமாள் அவர்களின் மறைவுக்கு பா.ம.க. அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. மது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சாகும் வரை உண்ணாநிலை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இம்மாநாடு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

அரசியல் தீர்மானம்
ஒரு வாளியில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்றால், அதில் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்பதைவிட, ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறாமல் தடுப்பதற்காக அதிலுள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டியது முக்கியம் ஆகும். அதேபோல், ஒரு மாநிலம் முன்னேறுவதற்கு அதன் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீரழிவுகளை அகற்றுவது ஆகும்.

ஓட்டை வாளியை வைத்து என்ன செய்வது
ஆனால், இருப்பது ஓட்டை வாளி .... அதில் ஊற்றுவதற்கு தண்ணீரே இல்லை என்பதைப் போல, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வகை செய்யப்படாத நிலையில், இயற்கையாக ஏற்படும் வளர்ச்சிக்கும் மது அரக்கனும், ஊழல் சாத்தானும் முட்டுக்கட்டைப் போட்டுக்கொண்டு இருப்பது தான் தமிழகத்திற்கு இயல்பாக கிடைக்க வேண்டிய வளர்ச்சியும் எட்டாமல் போனதற்கு காரணம் ஆகும்.

கல்வி, சுகாதாரம் சீர்கெட்டுள்ளது
தமிழகத்தின் வளர்ச்சிக் குறைபாட்டுக்கான முக்கியக் காரணங்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகள் மீது உரிய கவனம் செலுத்தப்படாதது ஆகும்.

வீழ்ச்சிக்குக் காரணம் மதுவும், ஊழலும்
தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் மதுவும் ஊழலும் தான். இந்த உண்மையை சமூக அக்கறையாளர்கள் தொடங்கி பொருளாதார அறிஞர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

மது தமிழகத்தின் சாபக்கேடு
இன்றைய நிலையில், மது தமிழகத்தின் சாபக்கேடாக உருவெடுத்திருக்கிறது. ஆக்டபஸ் அதன் எட்டுக் கரங்களால் சுற்றியுள்ளதை எல்லாம் வளைப்பதைப் போல மதுவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தியிருக்கிறது.

பள்ளிப் பிள்ளைகளே குடிக்கிறார்கள்
பள்ளி செல்லும் மாணவர்கள் தொடங்கி பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரும் மதுவுக்கு அடிமை ஆகி இருப்பதை ஊடகங்களில் அன்றாடம் வெளியாகும் செய்திகளே உறுதி செய்கின்றன.

மதுவை வைத்துக் கொள்ளை
மதுவிற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வருமானம் என்பது மிகப்பெரிய லாபமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பணம் முழுவதும் வானத்திலிருந்து விழுந்தவை அல்ல. அப்பாவி ஏழைக் குடும்பங்களில் உணவு சமைக்கவும், கல்வி கற்கவும், மருத்துவச் செலவுக்கும் பயன்பட வேண்டிய தொகை தான் மதுவை கொடுத்து கொள்ளையடிக்கப்படுகிறது.

உற்பத்தி இழப்பு ரூ. 2.20 லட்சம் கோடி
அது மட்டுமின்றி, மக்கள் மது குடித்துவிட்டு பணி செய்யத் தவறுவதால் ஏற்படும் உற்பத்தி இழப்பு மட்டும் நடப்பாண்டில் ரூ.2.20 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் சொர்க்கபுரியாக மாறும்
இந்த தொகை மட்டும் வருவாயாக மாறி மக்கள் கைகளிலும், அரசின் கஜானாவிலும் சேர்ந்தால் தமிழகம் சொர்க்கபுரியாக மாறி விடும். ஆனால், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மதுவை ஒழித்து தமிழகத்தை வளப்படுத்துவதை விட, மதுவை விற்று தங்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகளை வளப்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டுகின்றன.

தலைகுனிய வைக்கும் ஊழல்
அடுத்து ஊழல்... இந்தியாவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் தமிழகத்தை தலைகுனிய வைப்பது ஊழல் தான். சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் ஊழல், நியாயவிலைக் கடையில் வழங்க பருப்பு வாங்குவதில் ஊழல், இருளை அகற்ற மின்சாரம் வாங்குவதில் ஊழல், பணி நியமனத்திற்கு ஊழல், பணியிட மாற்றத்திற்கு ஊழல், கிரானைட் ஊழல், தாது மணல் ஊழல் என திரும்பிய திசையெல்லாம் ஊழல் நாற்றம் மூச்சை அடைக்கிறது.

பலியான நேர்மையான அதிகாரிகள்
ஆட்சியாளர்களின் ஊழல் பசிக்காக முத்துக்குமாரசாமி என்ற நேர்மையான அதிகாரியை தெரிந்து பலி கொடுத்த தமிழ் சமுதாயம், தெரியாமல் நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும், அப்பாவி மக்களையும் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இயற்கை வளம் கொள்ளை
குறிப்பாக இயற்கை வளங்களான கிரானைட், தாது மணல் போன்றவற்றை தனியார் சிலர் கொள்ளையடிப்பதும், அவர்களை அறிவிக்கப்படாத பங்குதாரர்களாக வைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதும் தமிழக பொருளாதாரத்தின் ஆணி வேரை அமிலம் ஊற்றி அழிக்கும் செயலாகும்.

அதிமுகவும் அப்படித்தான், திமுகவும் இப்படித்தான்
இந்த இரு இயற்கை வளங்களையும் அரசே கையாண்டால் தென் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை வழங்க முடியும். ஆனால், மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய அ.தி.மு.க.வும், அதை அப்படியே கடைபிடித்த தி.மு.க.வும் இயற்கை வளக் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் கிரானைட் மற்றும் தாது மணல் குவாரிகளை அரசுடைமையாக்க தயங்குவதன் காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தொழில் வளம் இல்லாமல் போன தென் மாவட்டங்கள்
தென் மாவட்டங்களில் தமிழும், அன்பும், வீரமும் தழைத்தோங்கும் போதிலும், போதிய அளவில் தொழில் வளம் பெருக்கப்படவில்லை. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததுடன், விலை மதிப்பற்ற இளைஞர் சக்தி வீணான செயல்களிலும், வெறுப்பை வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

விசாலமான பார்வை இல்லை
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்படும் தொழில் முதலீடுகளை தென் மாவட்டங்களுக்கும் கொண்டு வர வேண்டும்; அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற விசாலமான எண்ணமோ, தொலை நோக்குப் பார்வையோ திராவிடக் கட்சிகளுக்கு இல்லாமல் போனது தான் தென் மாவட்டங்களின் வளர்ச்சி தேக்க நிலைக்கு காரணம்.

பாமகவின் அசைக்க முடியாத நம்பிக்கை
தென் மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும், தொழிற்சாலைகளையும் அமைத்தல், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், மதுரை விமான நிலையத்தில் முழு அளவிலான சர்வதேச சேவைகளைத் தொடங்குதல், வேளாண்மையை பெருக்குவதற்கான நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் தென் தமிழகத்தில் வளமையையும், செழுமையையும் கொண்டு வர முடியும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு
மது ஒழிப்பும், ஊழல் ஒழிப்பும் தான் தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்து என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. வளர்ச்சி என்ற வாளியின் ஓட்டைகளாக இருக்கும் இந்த இரு தீமைகளையும் ஒழித்தால் தமிழகம் தன்னிகரில்லாத வளர்ச்சி பெறுவது உறுதி.

பாமகவால் மட்டுமே முடியும்
இதையெல்லாம் செய்து முடிக்க பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே முடியும். எனவே, ஒரு சொட்டு மது கூட இல்லாத, ஒரு பைசா ஊழல் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க, டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியை அமைக்க பா.ம.க.வின் பாண்டிய மண்டல அரசியல் மாநாடு சபதம் ஏற்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications