டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தை நடத்தியதால் ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் ஆக்னஸ் கைது?
சென்னை: சென்னையில் சர்ச்சைக்குரிய பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் ஆக்னஸ் கைது செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையின் பார் மூடப்பட்டது.
இதையடுத்து குடிமகன்கள் சாலையோரமாகவும் பேருந்து நிலையத்திலும் மது குடிக்க தொடங்கினர். நாளடைவில் அந்த பகுதியே ஒரு திறந்தவெளி பார் போல மாறியது.

இதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்ற போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வழிப்பறி கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை நந்தினி உயிரிழந்தார்.
கொள்ளையன் குடிபோதையில் இருந்ததால் மதுதான் பிரச்சினைக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கொதித்து எழுந்தனர். ஆகையால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அக்கடை மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தவ கடல் அறக்கட்டளை தலைவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான பாமகவைச் சேர்ந்த ஆக்னஸ். இவர்தான் பட்டினப்பாக்கம் டாஸ்மாக் மதுகடையை மூட வலியுறுத்தி தீக்குளிக்கவும் முயற்சித்தவர்.
இப்போராட்டம் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருந்தது. இந்த நிலையில்தான் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 36 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆக்னஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தியதாலே ஆக்னஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications