மோடி அமைச்சரவையில் அன்புமணிக்கு இடம்.. பாஜகவுக்கு நெருக்கடியை ஆரம்பித்தது பாமக!
சென்னை: தர்மபுரி தொகுதியில் மட்டுமே வெல்லும் பாமக, இப்போதே நரேந்திர மோடி அமைச்சரவையில் தனது கட்சிக்கு இடம் கேட்டு பாஜகவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மட்டுமே வெல்கிறார் இத்தேர்தலில். மற்ற இடங்களில் பாமக தோல்வியைத் தழுவியுள்ளது.

இன்னும் தேர்தல் முடிவு முழுமையாக வராத நிலையில் இப்போதே அன்புமணிக்கு அமைச்சரவையில் சீட் கேட்க ஆரம்பித்து விட்டது பாமக.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இரண்டு பேருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. ஒருவர் அன்புமணி ராமதாஸ். இன்னொருவர் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். அவர் கன்னியாகுமரியில் வெல்கிறார்.
பொன். ராதாகிருஷ்ணனுக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்து விடும். அதேசமயம், கூட்டணிக் கட்சிகளில் பாமக மட்டுமே ஓரிடத்தில் வெல்கிறது. எனவே கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையை பாஜக கடைப்பிடிக்க முடிவு செய்தால் அன்புமணிக்கு தானாகவே சீட் கிடைத்து விடும்.
அன்புமணி இதற்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். அது கேபினட் பொறுப்பாகும். தற்போதும் அவர் கேபினட் பொறுப்பையே விரும்புவார். ஆனால் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படிக் கொடுக்காவிட்டால் பாமகவும் அதை ஏற்காது.
இந்த நிலையில், பாமகவே தனது கட்சிக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பாமக வழக்கறிஞரும், செய்தித் தொடர்பாளருமான கே.பாலு கூறுகையில், பாஜக சுயேச்சையாக ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இருப்பினும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் அது இடம் தர வேண்டும்.
எனவே பாமகவுக்கும் மத்திய அமைச்சரவையில் சீட் தரப்பட வேண்டும். இருப்பினும் இதை முடிவு செய்ய வேண்டியது பாஜகதான். நாங்கள் நிச்சயம் அமைச்சர் பதவி கேட்போம். அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்றார் பாலு.












Click it and Unblock the Notifications