மர்ம மரணமடைந்த டிரைவரின் சொந்த ஊர் எடப்பாடி... போயஸ் தோட்டத்தில் வேலைக்கு சேர்த்தது யார் தெரியுமா?
விபத்தில் பலியான போயஸ் தோட்டத்து மாஜி கார் டிரைவர் கனகராஜை போயஸ் தோட்டத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு பின்னர் நீக்கியது முதல்வர் பழனிச்சாமிதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளையில் விசாரிக்கப்பட்டு வந்த டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது சொந்த ஊர் எடப்பாடி என்பதும், அவரை போயஸ்கார்டனில் பணியில் சேர்த்து விட்டது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதும் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலையில் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைக்கில் வந்த போது சென்னை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். கொள்ளை வழக்கில் முக்கிய தடயங்களை மறைக்க கனகராஜ் கார் ஏற்றி கொல்லப்பட்டிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவலுக்கு இருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்த கும்பல் மற்றொரு காவலாளியான கிஷண்பகதூரை கட்டி போட்டுவிட்டு ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அறைக்குள் புகுந்து அங்கிருந்த சூட்கேஸ்களை உடைத்து அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மர்ம விபத்துக்கள்
இந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சதீசன், சிபு, சந்தோஷ், சயான் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தான் விசாரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மற்றொரு குற்றவாளி சயான் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
போயஸ் தோட்டத்தில் வேலை
மர்மமரணமடைந்த கனகராஜின் சொந்த ஊர் எடப்பாடி. சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது 2வது மகன் கனகராஜ். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் கார் டிரைவராக பணிக்குச் சேர்ந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி உதவி
கனகராஜின் அண்ணன் தனபால் அதிமுக பிரமுகராவார். இவருக்கும் அப்போதைய சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சரவணனுக்கு இடையே நட்பு இருந்தது. இதன் காரணமாகவே அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியுடன் போயஸ் கார்டனில் கனகராஜூக்கு பணி வாங்கப்பட்டிருக்கிறது.
கொடநாடு கொலை வழக்கு
கனகராஜைப் போல் மேலும் சிலருக்கும் போயஸ் கார்டனில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சரவணன். 2010ல் ஒரு சாலை விபத்தில் சரவணன் பலியாகவே கனகராஜ் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிச்சாமியே வேலையைவிட்டு நீக்க காரணமாக இருந்துள்ளார்.
உயிரிழந்த கனகராஜ்
இந்நிலையில்தான், கனகராஜை போலீஸார் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக விசாரித்துள்ளனர். நேற்று கனகராஜ் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தென்னங்கொடிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.