3000 அடி உயரத்திலிருந்து இளைஞர் பலியான சம்பவம்.. தலைமலை கோயில் சுவற்றை சுற்ற போலீஸ் தடை
திருச்சி மாவட்டத்தில் உள்ள தலைமலை கோயிலில் ஆபத்தான வகையில் கிரிவலம் வந்த போது 3000 அடி உயரத்திலிருந்து விழுந்து இளைஞர் பலியானதை அடுத்து அந்த பகுதியில் கிரிவலம் வர போலீஸ் தடை விதித்துள்ளது.
நாமக்கல்: முசிறியில் உள்ள தலைமலை கோயிலில் சுற்றுச் சுவற்றில் கிரிவலம் வந்த இளைஞர் ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் கிரிவலம் மேற்கொள்ள போலீஸார் தடை விதித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும். கடந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர்.

அப்போது கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீஸார் நாடினர்.
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் என்றும் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது. அந்த இளைஞர் 600 அடி உயரத்தில் இருந்த பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து ஆபத்தான அந்த கோயில் சுவற்றில் கிரிவலம் வர தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்னொரு உயிர் போகாத நிலையில் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சஞ்சீவராய பெருமாள் கோயில் சுவற்றில் கிரிவலம் செல்வது ஆபத்தானது என்றும் இது ஆபத்தான பகுதி என்றும் எருமைப்பட்டி போலீஸார் சார்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications