‘கலவர’ கிராமத்தில் ஆறுதல் கூறச் சென்ற கிருஷ்ணசாமிக்கு தடை - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை கிராமத்தில் கடந்த ஜூன் 6ம் தேதி நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ சென்றிருந்தார்.
அங்குள்ள கோயில் முன்பு பாதிக்கப்பட்டவர்களிடம் விபரம் கேட்டறிந்த கிருஷ்ணசாமியிடம், மணக்கரையில் பாதிக்கப்பட்ட பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும், வயல் வேலைக்கு செல்ல தனியாக பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றவும், மீண்டும் பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க ஆவண செய்யவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
பின்னர் அங்கிருந்து பேட்மாநகரம் அருகே உள்ள மூலக்கரை கிராமத்திற்கு சென்று கடந்த 31ம் தேதி கொலை செய்யப்பட்ட குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து கால்வாய் கிராமத்தில் கடந்த 6ம் தேதி கொலை செய்யப்பட்ட இன்ஜினியர் செல்லத்துரை,கோயில் பூசாரி ஆவுடைதங்கம் ஆகியோர் உறவினர்களுக்கு ஆறுதல் கூற புறப்பட்டார்.
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் கால்வாய் கிராமத்திற்குள் கிருஷ்ணசாமி வருவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அங்கு மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், தாசில்தார் ராமசாமி ஆகியோர் கிருஷ்ணசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து நான் வராவிட்டாலும் பரவாயில்லை. கால்வாய் கிராமத்தில் நான் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என தாசில்தாரிடம் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
இதையடுத்து கால்வாய் கிராமத்துக்கு சென்று திரும்பிய தாசில்தார் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினரும் கால்வாய் கிராமத்தில் இல்லை என்று கிருஷ்ணசாமியிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி திரும்பி சென்றார்.












Click it and Unblock the Notifications