பெங்களூர் வரும் ஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு: இரு மாநில போலீசாரும் இணைந்து ஏற்பாடு
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெங்களூர் கோர்ட்டில் தீர்ப்பு நாளன்று ஆஜராக வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக உளவுப் பிரிவு அதிகாரிகள் பெங்களூருக்கு வந்து ஆய்வு நடத்தியுள்ளனர். அதே நேரம், பெங்களூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் சென்னை சென்று தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பெங்களூருக்கு வெளியே..
ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதல்வர். அவர் இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். எனவே பெங்களூரில் சொத்துக்குவிப்பு நடைபெற்ற சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது சிரமம். இதை கருத்தில் கொண்டு ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நகருக்கு வெளியே உள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியிலுள்ள காந்தி பவனில் கோர்ட் இடமாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழக அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில், தமிழக முதல்வருக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக உளவுப் பிரிவு ஐஜி அம்ரேஸ் புஜாரி, பாதுகாப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பெங்களூர் சென்றனர். அவர்கள், அங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெங்களூர் சிட்டி போலீஸ் கமிஷனர் எம்.என் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினர்.

காரில் பயணம்
மேலும், தீர்ப்பு வழங்கப்பட உள்ள இடம் மற்றும் அந்தப் பகுதிக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டனர். முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நகரின் மையப்பகுதியிலுள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு காரில் செல்ல உள்ளார். எனவே இந்த வழித்தடத்தில் உள்ள ஆடுகோடி, கோரமங்களா, சில்க்போர்ட், பொம்மனஹள்ளி, சிங்கச்சந்திரா ஆகிய மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசாரை குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் கூடுதல் கமிஷனர் ஆய்வு
இதேபோல, பெங்களூர் நகர குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் சென்னை வந்து இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

போக்குவரத்திற்கு கெடுபிடி
ஒசூர் எல்லையில் இருந்து கர்நாடகாவிற்குள் நுழையும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்யவும், குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட வாகனங்களை பெங்களூருக்குள் நுழைய அனுமதிக்காமல் தடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே இப்போதே பெங்களூரிலுள்ள ஹோட்டல்களில் அதிகமுகவினர் அறைகளை புக் செய்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications