சென்னை விமான நிலையத்தில் பேச்சு: வைகோ உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி பேசியதாகவும், கூட்டம் கூடியதாகவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்ளிட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் மாநாட்டை முடித்துக் கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோலாலம்பூரில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அவருக்கு மதிமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் விமான நிலையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார்.

அப்போது அவர், மீன்பிடிக்க சென்ற அப்பாவி தமிழக மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக அபாண்டமான பொய் குற்றச்சாட்டை ராஜபக்சே அரசு சுமத்தி அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். மேலும் இந்த விஷயத்தில் ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகின்றனர். இது ராஜபக்சே அரசும், மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம் என்று கூறினார்.

மீனவருக்கு மன்னிப்பு வழங்க தயார் என்ற இலங்கை அமைச்சர் பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக பேசியது ராஜபக்சேவின் சூழ்ச்சி எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், வைகோ, மல்லை சத்யா உள்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அனுமதி இன்றி தொண்டர்களிடையே பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 200 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications