கத்தியுடன் அட்டகாசம் செய்த ரவுடி.. பாய்ந்து பிடித்து வெறும் கையால் மடக்கிய ஏட்டு!
சென்னை: சென்னை திருவொற்றியூரில் நேற்று ரவுடி ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறித்ததைப் பார்த்து அந்த வழியாக வந்த ஏட்டு ஒருவர் வெறும் கையால் தனது உயிரையும் பணயம் வைத்து துணிச்சலாக அவருடன் போராடி மடக்கிப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூரில் விஸ்வநாதன் என்ற ஒரு ரவுடி இருக்கிறார். கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வது விஸ்வநாதனின் வழக்கம். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்றும் மார்க்கெட் லைன் பகுதியில் கத்தியைக் காட்டி ஒரு லாரி டிரைவரிடம் பணம் பறித்தார் விஸ்வநாதன். அப்போது அந்த வழியாக தலைமைக் காவலர் விஜயக்குமார் வந்தார்.

விஸ்வநாதன் கத்தியுடன் இருப்பதைப் பார்த்த அவர் அவரைப் பிடிக்க முயன்றார். ஆனால் கத்தியை வைத்துக் குத்த முயன்றார் விஸ்வநாதன். சுதாரித்த விஜயக்குமார், கத்தியைத் தட்டி விட்டு விட்டார். இதனால் கோபமடைந்த விஸ்வநாதன் கல்லை எடுத்து வீசினார். அப்படியும் விடாத விஜயக்குமார், அப்படியே ரவுடி மீது பாய்ந்து அவரை மடக்கினார்.
அப்போது விஜயக்குமாரை சரமாரியாக அடித்து விடுபட முயன்றார் விஸ்வநாதன். ஆனால் விஜயக்குமார் விடவில்லை. கடுமையாகப் போராடி அவரை மடக்கிப் பிடித்து கைகளை பின்பக்கமாக மடக்கிப் பிடித்து, விஸ்வநாதனின் சட்டையையே கயிறு போல மாற்றி கட்டினார். தனி ஆளாக அவர் போராடியதை மக்கள் வழக்கம் போல வேடிக்கைதான் பார்த்தனர். விஜயக்குமாருக்கு உதவியாக விஸ்வநாதனைப் பிடிக்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸார் விஸ்நாதனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications