போஸ்டர் அவமதிப்பால் பதற்றம்- வாலிபருக்கு சராமரி அரிவாள் வெட்டு
நெல்லை: நெல்லையில் இந்து மகா சபை சார்பில் ஒட்டபட்ட போஸ்டர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்நதவர் சவுந்திரபாண்டியன். இந்து மகா சபை நெல்லை மாநகர் மாவட்ட தலைமை செயலாளர். இந்த நிலையில் இந்து மகா சபை சார்பில் நெல்லையில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது.

இதில் வளையாபதி தெருவில் ஓட்டப்பட்டிருந்த போஸ்டரை யாரோ அவமதிப்பு செய்திருந்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இமானுவேல் என்பவருக்கும், சவுந்திரபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் இமானுவேலை சவுந்திரபாண்டியன் தாக்கியதாக கூறப்படுகிறது. இமானுவேல் உடனடியாக இந்த தகவலை போலீசாரிடம் கூறி புகார் பதிவு செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சவுந்திரபாண்டியனை கைது செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சவுந்திரபாண்டியன் ஆதரவாளர்கள் மாலை வளையாபதி தெருவுக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். அங்கிருந்த பொதுமக்களை சராமரியாக தாக்க தொடங்கினர். இதனால் அவர்கள் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அருகில் இருந்த மணி என்பவரது வீட்டுக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த அவரது மகனை அரிவாளால் சராமரியாக வெட்டினர். மேலும் பொதுமக்கள் தெருவில் நிறுத்தியிருந்த 2 ஆட்டோக்கள், 1 பைக் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டது.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications