வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்படாததால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை- போலீஸ்
அலங்காநல்லூரில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடந்ததாக கூறினார்கள். ஆனால் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடாததால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.
அலங்காநல்லூர்: அலங்காநல்லூரில் தடையை மீறி மாற்று வழியில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். ஆனால் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்படாததால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.
பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டை நடத்த அலங்காநல்லூர் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஆராவாரமாக ஒன்று கூடியுள்ளனர். ஆனால் ஜல்லிக்கட்டை நடக்கவிடாமல் தடுக்க ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசை ஏமாற்றிவிட்டு மாற்றுவழியில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். அப்போது, சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க இளைஞர்கள் முயற்சி செய்தனர். இதனையடுத்து, ஜல்லிக்கட்டு நடைபெற்றுவிட்டது என்று கூறி இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியே நடத்தப்படவில்லை என போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. வாடிவாசல் வழியாக காளைகள் எதுவும் அவிழ்த்துவிடவில்லை என்றும் அதனால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றும் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடந்தால் போலீஸ் ஒத்துழைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், அலங்காநல்லூரில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications