டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட செய்திகளை வெளியிட விடாமல் மீடியாக்களுக்கு காவல்துறை நெருக்கடி
சென்னை: டாஸ்மாக் கடையை மூட போராடிய சென்னை கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடித்து நடத்தினர். இந்த சம்பவத்தில் நடந்த சம்பவத்தை அறிய, மாணவ, மாணவிகளிடம் பேட்டியெடுக்க முயன்றபோது, தொலைக்காட்சி நிருபர்களின் மைக்குகளை போலீசார் பிடுங்கி தரக்குறைவாக நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அமைந்தகரையிலுள்ள டாஸ்மாக் கடை மீது இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், புரட்சிகர மாணவர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் இணைந்து கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது, போலீசார் மாணவ, மாணவிகள் மீது தடியடி நடத்தியதில் பலருக்கும் மண்டை, இடுப்பு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. மாணவ, மாணவிகளை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று ஜீப்புகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த நிருபர்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பேட்டியெடுக்க முயன்றனர். அப்போது டிவி நிருபர்களின் மைக்குகளை பிடுங்கிய போலீசார், அவர்களை கண்டித்துவிட்டு ஜீப்பில் விரைந்துவிட்டனர். மாணவ, மாணவிகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ற தகவலையும் போலீசார் அப்போது கூறாமல் சென்றுவிட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து கூறும்போது, "மதுபானத்திற்கு எதிராக பெண்களே வீதியிறங்கி போராடும் நிலையில், போலீசார் அவர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களையே தாக்கியது சரியில்லை. ஒரு பெண் மயங்கிய நிலையில் இருந்தார். அவரையும் தரதரவென ஜீப்புக்கு இழுத்துச் சென்று கொண்டு சென்றனர்" என்றனர். அதேநேரம் மாணவிகளை ஆண் போலீசார் எதுவும் செய்யவில்லை. பெண் போலீசாரை கொண்டே அவர்கள் மீது தாக்குதலும், தரதர இழுப்புகளும் நடந்தன.

மேலும், தமிழகம் முழுவதிலும் நடைபெறும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களை, செய்தியாக்க வேண்டாம் என்று ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள நிருபர்களுக்கு, காவல்துறை 'அன்புக் கட்டளை' போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications