+2 விடைத்தாள் திருத்தும் பணி 11ம் தேதி முதல் துவக்கம்- நெல்லை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பிளஸ்டூ தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளன.
நெல்லை: பிளஸ்டூ தேர்வு முடிந்ததால் மையங்களில் விடைத்தாள் கட்டுகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11-ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்டூ தேர்வு கடந்த மார்ச் 1ம்தேதி துவங்கி தற்போது முடிந்து விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு வினாக்கள் யோசித்து எழுதும் அளவுக்கு இருந்ததாகவும், இதில் உயிரியல், பொருளாதார தேர்வுகள் மட்டும் கஷ்டமாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்திருந்தனர். இந்த பாடங்களில் சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
தேர்வுகள் முடிந்து விட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட விடைத்தாள் மையத்திற்கு கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வருகிற 11ம் தேதி முதல் முதல் நிலை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள் திருத்துகின்றனர். பின்னர் பிற ஆசிரியர்களும் அதன் பின்பு இதில் இணைந்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு முதலிலேயே பிற பாடங்களுக்கு தாள்களை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதலில் மொழி பாட தாள்கள் தான் திருத்தப்பட்டது. இந்நிலையில் மாலை முதல் பிளஸ்டூ விடைத்தாள் கட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மையங்களுக்கு வந்து சேர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் பாளை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்காசி வேலாயுத நாடார் மெட்ரிக் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் சொந்த மாவட்டத்தை தவிர வேறு பகுதி மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் தான் திருத்தப்படும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறைகேட்டை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.