சென்னையில் உள்ள கமல்ஹாசன் வீடு முன்பு போலீஸ் குவிப்பால் பரபரப்பு!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக நடிகர் கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவுகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என கமல்ஹாசன் கூறியது, அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு ஆட்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் மீது அவதூறு வழக்கு தொடர போவதாகவும் எச்சரித்து உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் உங்கள் இன்னல்களையும் உங்கள் வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள். இது டிஜிட்டல் யுகம் என்பதால் அதை பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தார்.
அதோடு நின்றுவிடாமல் அமைச்சர்களை எலக்ட்ரானிக் முறை மூலம் தொடர்பு கொள்ள கூடிய முகவரியையும் வெளியிட்டார். இதனால் அமைச்சர்கள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.