புகார் கொடுக்க வந்தவரின் முதுகை புண்ணாக்கிய போலீஸ்
நாமக்கல்: தன்னுடைய வண்டி திருடு போய்விட்டது என்று புகார் கொடுக்க சென்றவரையே திருடன் போல் நினைத்து அடித்து உதைத்துள்ளனர் காவல்துறையினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ் என்பவர். பெயிண்டரான அவரது பைக் நேற்று முன்தினம் மாலை காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்காததால் நேற்று மதியம் பரமத்தி வேலூர் போலீஸில் புகார் செய்ய சென்றார்.
அப்போது அங்கு தன்னுடைய வண்டி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் எஸ்.ஐ. விஜயராஜிடம் கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ. விஜயராஜ் சுந்தரராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதன் பின் மாலையில் வீட்டுக்கு வந்த சுந்தரராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுந்தரராஜை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.