ஏடிஎம் கார்டு மோசடி பின்னணியில் மாவோயிஸ்ட்கள்? போலீஸ் சந்தேகம்
ஏடிஎம் கார்டு மோசடியின் பின்னணியில் மாவோயிஸ்ட்களின் சதி உள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நெல்லை: தமிழகத்தில் ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபடுவர்கள் பின்னனியில் மாவோயிஸ்ட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் குவிந்து வருகின்றன. இதில் சாதாரண கிராமத்தினர் வரை படித்த அதிகாரிகள் வரை சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முதலில் கார்டு கொடுத்த வங்கியில் இருந்து பேசுவதாக கூறுபவர்கள், உங்களது கார்டு கலாவதியாகி விட்டதாகவும், புதுப்பிக்க வேண்டும் என்றும், ஏடிஎம்மின் 16 இலக்க எண்ணையும், பின்பக்கம் உள்ள மூன்று குறியிட்டு எண்ணையும் பெறுகின்றனர்.
அவர்களும் உண்மையென நம்பி நம்பரை கொடுத்து விடுகின்றனர். மோசடி கும்பல் அந்த நபரின் செல்போனுக்கு வரும் ஓடிபி தகவலையும் பெற்றுக் கொண்டு சிறிது நேரத்தில் பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ரகசிய விசாரணையில் நடத்தியதில் இதற்கு ஜார்கண்ட் மாநிலம் சமுத்திரா மாவட்டம் கர்மத்தார் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இருந்து பாருதிநிஜாம் என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்ததால் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலால் ஏடிஎம் கார்டு மோசடியில் மாவோயிஸ்ட்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. பிரதமரின் பண மதிப்பு இழப்பால் பழைய நோட்டுகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனால் ஏடிஎம் கார்டு மோசடியில் இறங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.