வாட்ஸ் அப்பில் பெண்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 7 ஆண்டு சிறை: போலீஸ் எச்சரிக்கை
சென்னை: தவறான உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படத்தை பரப்புபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேஸ் ரிப்பேர் செய்வதாக ஏமாற்றி கொள்ளை அடிப்பவர் என இளம்பெண் ஒருவரின் புகைப்படம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. அதை பரப்பியவர் ஒரு போலீஸ் என்பதால், மக்கள் அதனை எச்சரிக்கை செய்தியாகவே எடுத்துக் கொண்டனர்.
ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்பெண் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது எதிரிகள் சிலர் இவ்வாறு அவரது புகைப்படத்தை தவறாக பரப்பியதும் கண்டுபிடிக்கப் பட்டது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் போலீஸ் ஒருவர் காவல் உதவி ஆணையருடன் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது. அந்த ஆடியோவில் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் அநாகரீகமாக பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி ஆணையரின் படம் வெளியே வந்து விட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், தங்களுக்கு வேண்டாத பெண்களின் புகைப்படங்களை போட்டு,‘இதுதான் அந்த பெண் போலீஸ்' என்ற தலைப்புடன் வதந்தி பரப்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இப்படியாக ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான புகைப்படங்கள் மணமகன் தேவைக்காக கொடுக்கப் பட்ட புகைப்படங்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் இவ்வாறு பெண்களின் புகைப்படங்களை அவதூறாகப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெண்களின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் பரப்பு பவர்கள் கைது செய்யப்படு வார்கள். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்.
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை பரப்புபவர்களை அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்து விடலாம். இதனால், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.