தனித்துவமான அரசியல், சமூக பார்வையுடன் கட்டுரைகளைப் படைத்த ஞாநி- ஸ்டாலின், ஜிஆர், பொன்னார் புகழஞ்சலி
மூத்த பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Recommended Video

சென்னை : தனித்துவமான அரசியல், சமூக பார்வையுடன் கட்டுரைகளைப் படைத்த மூத்த பத்திரிகையாளர் ஞாநியின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழின் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63. அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரின் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஞாநியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஞாநியின் மறைவால் வருத்தம்
இதுகுறித்து திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ஞாநியின் மறைவு அதிர்ச்சியை தருகிறது. தனித்துவமான அரசியல் மற்றும் சமூக பார்வையோடு பல கட்டுரைகளைப் படைத்த ஞாநியின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

மனிதநேய பார்வை கொண்ட ஞாநி
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், ஞாநியின் மறைவு அதிர்ச்சியைத் தருகிறது. முற்போக்கு சிந்தனை, மனிதநேய பார்வை, அரசியல் செயல்பாடு கொண்ட ஞாநியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று குறிப்பிட்டு உள்ளார்.

எதிலும் உறுதிகொண்ட ஞாநி
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: சிபிஎம்-ன் நீண்ட நாளைய நண்பர், தோழர் ஞாநி. தோழர் வி.பி.சிந்தனுடன் ஏற்பட்டத் தொடர்பால் இடதுசாரி சிந்தனையாளர் ஆனார். அவர் ஒரு பத்திரிக்கையாளர், எழுத்தாளர். சொல்ல வந்தக் கருத்தை பளிச்சென்று கூறுவார். எதிலும் உறுதியாக இருப்பார். அவருடைய மறைவு பெறும் இழப்பு. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவருடைய மறைவால் துயருறும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பனுக்கு இறுதி வணக்கம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன்: நண்பர் ஞாநியின் மறைவு வேதனை தந்தது. 30 ஆண்டு கால நட்பு. கருத்து முரண்பாடுகள் உண்டெனினும், ஒருவரையொருவர் மதித்துப் பழகியுள்ளோம். இன்று காலை சட்டென வந்த செய்தி, நெஞ்சில் துயராய்ப் படர்ந்தது. நண்பனுக்கு என் இறுதி வணக்கம்.

டி.டி.வி தினகரன் இரங்கல்
ஞாநியின் மறைவு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தருவதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். ஞாநியின் மறைவுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி தினகரனும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications