பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகள் சார்பில் சிவகாசியில் நாளை கடையடைப்பு!
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் சார்பாக சிவகாசியில் நாளை கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக நாளை அனைத்து கட்சிகளின் சார்பாக கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்குமோ என்கிற அச்சத்தால் விற்பனையாளர்கள் சிவகாசி பட்டாசு தயாரிப்பு ஆலைகளுக்கு ஆர்டர் கொடுக்காமல் உள்ளனர். ஆர்டர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டால்தான் பட்டாசு உற்பத்தியே தொடங்கும்.
தற்போது விற்பனையாளர்கள் பட்டாசுகளை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருவதால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனிடையே பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை மாவட்டம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மதிமுகவும் ஆதரவு தரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.