"அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாம்"... காவிரி பிரச்சனை குறித்து பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு!
சென்னை: அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல கர்நாடகாவில் நடைபெற்ற தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு பின்னால் பாஜக ஈடுபட்டுள்ளதாக பேசுகிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிளிக்கையில் "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" போலத்தான் இந்தப் புகார் என்று கருத்து தெரிவித்துள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்.
இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
குளச்சல் துறைமுகம் அமைப்பது தொடர்பான ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக தமிழக முதல்வரை சந்தித்து ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டோம். அதற்கு ஜெயலலிதா ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அதே போன்று, கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்தி 4 வழிச் சாலையாக மாற்றுவது குறித்தும் பேசியுள்ளேன். அதற்கும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா மிக பொறுப்பாகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டுள்ளார் என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணனிடம், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் பாஜக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று பதில் சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் பொன். ராதாகிருஷ்ணன்.