பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த கட்சிகள் வேதனைப்படும்.. சாபம் விடும் பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள், தேர்தலுக்குப்பின் வேதனைப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தக்கலையில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கையைதான் மத்திய அரசு மேற்கொள்ளும்.

நேரத்திற்கு ஒருமுறை பெயரை மாற்றி கொண்டு இருக்கும் மக்கள் நலக் கூட்டணி ஒரு கூட்டணியே கிடையாது.
அந்த கூட்டணிக்கு கொள்கை எதுவும் கிடையாது. திமுகவும், பாமகவும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக அரசு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தமிழக அரசு, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப்பின் மிகுந்த வேதனையை உணரும் சூழல் உருவாகும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக, தேமுதிக, பாமக போன்றவை இப்போது அக்கட்சியுடன் கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications