கயிறு இழுத்தல், கபடி போட்டிகள்.. தென்மாவட்ட பொங்கல் விழாக்களில் குதுகலம்
நெல்லை: பொங்கல் இப்போது கார்பொரேட் விழாவாக மாறிக்கொண்டிருந்தாலும், கிராமங்கள்தான் அதன், மூலாதாரம். நகர வாழ்க்கையில் விழிபிதுங்கி நின்றாலும், வருடந்தோறும், பொங்கலுக்கு சொந்த கிராமங்களுக்கு மக்கள் பஸ்களில் ஓடுவது தங்கள் ஆதியை நோக்கிய ஒரு பயணம்தான்.
மற்ற மாவட்டக்காரர்களைவிட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் சென்னையில் தொழில்நிமித்தமாகவும், பணிக்காகவும் சென்று வாழ்ந்து வருகிறார்கள்.
அதேபோல, சென்னையில் இருந்து மிக தொலைவிலுள்ளதும், இம்மாவட்டங்கள்தான். எனவே அடிக்கடி அம்மாவட்ட மக்கள் சென்னையில் இருந்து, சொந்த ஊர்கள் சென்றுவருவது குறைவு.
தென் மாவட்டங்கள்
தீபாவளி, திருமண நிகழ்வுகள், கோயில் கொடை விழாக்கள் போன்றவற்றைப்போல பொங்கல் பண்டிகைக்கும் தென் மாவட்ட மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். பெங்களூர், மும்பை, கோவை என எங்கெங்கோ பணிநிமித்தமாக குடியேறிய அதே ஊர்க்காரர்களும் அப்போது சொந்த ஊர் வருகிறார்கள்.
பொங்கல் விளையாட்டுகள்
ஊர்களில் மொத்தமாக ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பை பெற்று மகிழ்கிறார்கள் இம்மக்கள். அனைவரும் ஒன்றாக இருக்கும்போது மகிழ்வாக பொழுதை கழிக்க விளையாட்டுகள் கைகொடுக்கின்றன. இவை பொங்கல் விழாக்கள் என்றே புகழ்பெற்றுள்ளன.
சாப்பாடு
உரியடித்தல், கயிறு இழுத்தல், கபடி, ஓட்டபந்தையம் என பல்வேறு போட்டிகள், ஆண்களும், பெண்களுக்குமாய் நடக்கின்றன. குற்றாலத்துக்கு இன்ப சுற்றுலா செல்வோரும் உண்டு. கடற்கரைகளுக்கு உணவு பண்டங்களோடு சென்று குழுமி சாப்பிட்டு மகிழ்ந்து களிப்போரும் உண்டு.
விடுதலை உணர்வு
அப்பார்ட்மென்ட் வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த நகரவாசிகளுக்கு, இந்த கிராமிய விழா பெரிய சுவாச காற்றுவெளியை உருவாக்கித் தருகிறது. அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு, தங்களின் உறவுக்காரர்கள் குறித்த அறிமுகம் கிடைக்கிறது.