நெருங்கும் பொங்கல் பண்டிகை - விற்பனைக்கு வந்த மண் பானைகள் - சந்தைகளில் குவிந்த கூட்டம்
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மண்பானை விற்பனை தீவிரமடைந்துள்ளது.
நெல்லை: தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா வருகிற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து மாட்டு பொங்கலும், காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 3 நாட்களும் பொங்கல் வைத்து தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவது வாடிக்கை.
பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. என்னதான் கேஸ் அடுப்பு, குக்கர்கள் வந்தாலும் பராம்பரிய முறைப்படி மண் அடுப்பு வைத்து கோலம் போட்டு மண் பானையில் பொங்கல் வைப்பது தான் தமிழர்களின் வழக்கம். இதனால் மண் பானைகள் சந்தைக்கு வந்து குவிந்துள்ளன. சாலைகளில் மண் பானை, மண் அடுப்பு, பனை ஓலை ஆகியவை குவிய தொடங்கியுள்ளன.
மண் பானை பல்வேறு அளவுகளில் விற்கப்படுகிறது. சாதாரண பானை ரூ.75 முதல் ரூ.200 வரையும், வர்ணம் தீட்டப்பட்ட ஓவிய பானை ரூ.500 என்றும் விற்கப்படுகிறது. இது போல் அடுப்பு கட்டிகள் ஓன்று ரூ.75க்கும், மூன்று மண் அடுப்பு ரூ.150க்கும் விற்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்த போதிலும் மக்கள் பராம்பாரியத்தை விட்டு கொடுக்காமல் வாங்கி செல்கின்றனர்.
தலை பொங்கல் கொண்டாடும் புது மண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பெண் வீட்டார் மஞ்சள் குலை, கரும்பு கட்டு, புது பானை மற்றும் பாத்திரங்கள், காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். இதன் காரணமாக சந்தையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.