கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி- பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் எதிர்ப்பு
சென்னை: சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு திமுகவை ஆதரிக்கக் கூடிய பூவுலகின் நண்பர்கள் எனும் சுற்றுச் சூழல் அமைப்பு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி. அவரது நினைவாக சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. இதற்கு பல்வேறு அமைப்புகள் அரசியல் ரீதியாகவும் சூழல் காரணங்களை முன்வைத்தும் எதிர்த்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு, சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் பேனா நினைவு சின்ன விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் திமுகவை ஆதரிக்கும் பூவுலகின் நண்பர்கள் எனும் சூழல் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில், கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய எத்தனையோ முட்டுக்கட்டைகளை போட்ட அரசு, இன்று கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைக்க வெகுவிரைவாக ஏன் அனுமதி அளிக்கிறது என்கிற சூட்சுமத்தை புரிந்துகொள்ளவேண்டும். வேறு என்ன, அரிச்சல்முனை கடலில் 1000 அடியில் "கதத்துடன் அனுமர்" சிலை அமைக்க அனுமதி கோரப்படும். அத்துடன் அது நிற்குமா?, உடன்குடி கடலில் காமராஜருக்கு சிலை, தூத்துக்குடியில் வஉசியின் நினைவாக கப்பலுடன் கூடிய சிலை, கடலூர் கடலில் "பாயும்புலி பண்டார வன்னியனுக்கு" சிலை என தமிழகத்தின் கடற்கரையில் அடுத்த 10-15ஆண்டுகளுக்குள் பலசிலைகள் முளைக்கும்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைவிட உயரமான சிலை பாரத அன்னைக்கு அமைக்கப்படலாம், இப்படியே தொடர்ந்தால் என்னவாகும்? எனவே இந்த அரசியல் விளையாட்டை நடத்த ஒன்றிய அரசு தயாராக உள்ளது, நாம்தான் இந்த விசயத்தில் சிக்கிகொள்வதில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். கலைஞருக்கு "சிறப்பான நினைவு சின்னம்" வேண்டும், கடலுக்குள் அமைக்கும் இந்த திட்டத்தை மட்டும் கைவிட கோருகிறோம் முதல்வரே.. இவ்வாறு சுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications