ஜில்லென்று விளாசிய கோடை மழை... சர்ரென்று குறைந்த அனல் மின் உற்பத்தி!
சென்னை: கோடை மழை காரணமாக தமிழகத்தில் மின் தேவை குறைந்துள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது.
இந்தாண்டு சற்று முன்கூட்டியே கோடை துவங்கி விட்டதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். வெயிலின் தாக்கத்தால் மின் தேவை அதிகரித்தது. கடந்த மாதம் தமிழகத்தின் மின் தேவை 13 ஆயிரம் மெகா வாட்டைத் தாண்டியது. இதனால், 600 மெகா வாட் வரை மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக மக்களின் மின் நுகர்வும் குறைந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மின் தேவை 9,195 மெகா வாட் ஆகவும், நேற்றைய மின் தேவை 10,770 மெகா வாட் ஆகவும் இருந்தது.
தமிழக அனல், புனல், காற்றாலை, மத்திய மின் தொகுப்பு மூலம் அதிகபட்சமாக, 12,500 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், மின் தேவை குறைந்ததால், அதற்குத் தக்க மின் உற்பத்தியும் குறைக்கப் பட்டது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில், ஒரு யூனிட் பழுதடைந்த நிலையில், 210 மெகாவாட் திறன் கொண்ட இதர மூன்று அனல் மின் நிலையங்களில், தலா, 175 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. அனல் மின் நிலையங்களில் நேற்று, 3,415 மெகாவாட், நீர் மின் நிலையங்களில், 580 மெகாவாட், காற்றாலைகளில், ஒன்பது மெகாவாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து, 3,140 மெகாவாட் என, தேவைக்கேற்ப, 10,770 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கிடையே கோடை மழையால் தமிழகத்தில் மின் தடையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications